Monday, January 25, 2016

சிகரெட்டுக்கு ரஜினி

புகைப் பிடிப்பதை நான் விட்டுவிட்டேன்- சூப்பர் ஸ்டார் ரஜினி//
மூன்று தலைமுறைகளாக தனது ஸ்டைல் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டு, அனைத்து இளைஞர்களின் ரோல் மடலாக, தலைவனாக, ஏன் கடவுளாகக் கூட திகழ்கின்றவர்! எம்.ஜி.ஆருக்கு பிறகு மிகப்பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று பின் அவருக்கென்று ஒரு தனி பாணியையே உருவாக்கியவர். இந்த பாணியை தேர்ந்தெடுப்பதற்கு அவர் ஸ்டைலே காரணமாகியிருந்தது. மக்கள் எல்லோரும் அவரை ஒரு கடவுள் ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டப்பின்பு (அதாவது பாட்ஷா படத்துக்கு பின்பு), அவருக்குள்ளும் அரசியல் ஆசை வந்துவிட்டது. ஆனால் மனதின் ஓரத்தில் லேசான பயம். எங்கே நானும் சிவாஜிகணேசன் போல் அரசியலுக்கு வந்துவிட்டு சொதப்பிடுவேனோ என்று எண்ணினார். இவர் சும்மாயிருந்தாலும் இவரது ரசிகப் பெருமக்கள் சும்மாயிருக்கவில்லை. இவர் வில்லனை பார்க்காமல் கேமராவை பார்த்துப் பேசிய டயலாக்குகளை பெருச்சாளி போல் குடைந்து ஆராய்ந்து, "ஆமாய்யா! தலைவர் கண்டிப்பாக அரசியலுக்கு வந்துவிடுவார்! அவர் பேச்சை கவனிக்கல? அவர் ரகுவரனை ஒழிப்பேன்னு சொன்னது 'அவர' சொன்ன மாதிரியே இல்ல?", "இனி தலைவர் அரசியலுக்கு வரும்வரை நான் வேற யாருக்கும் ஓட்டுப்போட மாட்டேன்! என் ஓட்டு தலைவனுக்கே!" என்று நெஞ்சடைக்க கத்தியவர் பலர். அதற்குப் பின் 'முத்து' படம் வந்தது. அந்த படத்தில் அவர் ரசிகர் இல்லாதவர்கள் கூட நம்பிவிட்டனர் ரஜினி அரசியலில் குதிக்கப்போகிறார் அப்பிடின்னு. அந்த அளவுக்கு டயலாக்குகள் எல்லாம் சிர்ர்ர்ர்பா அமைஞ்சிருந்துச்சு!

அப்புறம் என்ன நடந்துச்சுனா அரசியலுக்கான முதல் அடியை எடுத்து வைக்க ஆரம்பிச்சாரு! அதாவது "நான் இவர்களுக்கு ஆதரவு, அவர்களுக்கு ஆதரவு!" அப்பிடின்னு எதாவது ஒன்ன அவுத்துவுட்டு மக்கள் மத்தியில தன்னோட ரெஸ்பான்ஸ் எப்பிடி இருக்குன்னு வெள்ளோட்டம் விட ஆரம்பிச்சாரு! "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது!"ன்னு ஒரே வார்த்தை தான் சொன்னாரு. அவ்ளோதான்! அப்போவிருந்த திமுக அமோக வெற்றியடைந்தது. அப்புறம் இந்த 'ட்ரென்ட்' நன்றாக வொர்க்அவுட் ஆகவே, இதையே ஒவ்வொரு படத்திலும் உபயோகிச்சு மக்களோட பல்ஸை ஏற்றி அழகுப்பார்த்து மகிழ்ந்தார்! பின்னர் வந்தது 'பாபா' படம். இவரே திரைக்கதை எழுதி அந்த நேரத்தில் சரியான சான்ஸ் கிடைத்திராத சுரேஷ் கிருஷ்ணா இயக்கியது. ரஜினி என்றதும், மறுப்பேச்சு பேசாமல் வந்திருப்பார் போலும் (ஏற்கனவே 'அண்ணாமலை'யை இயக்கியவர் தான்)! அந்த படம் வெளிவரும் முன்பே பல பிரச்சனைகளை சந்தித்தது (படம் வெளிவந்த அப்புறம் பூரா தமிழ்நாடும் மண்டைய பிச்சிக்கிட்டது வேற விஷயம்). இவர் புகைப்பிடிப்பதற்கு முதல்முறையாக வலுவான எதிர்ப்பு கிளம்பியதும் இந்த படம் வருவதற்கு முன்னர் தான். இரண்டு படங்களுக்கு பின் வந்தது குசேலன். இந்த படத்தில் அவர் என்ன நினைத்தாரோ தெரியல, தடாருன்னு "நான் அரசியலுக்கு எல்லாம் வரவே மாட்டேன்! என் ரசிகர்கள் கிளப்பிவிட்டது இதெல்லாம்! நானே சொந்தமா எந்த வசனமும் பேசமாட்டேன் எல்லாம் என் இயக்குனர்கள் எழுதிக்கொடுத்தது தான் பேசுறேன்" அப்பிடின்னு சொன்னத அவர் சாவக்கடினமான ரசிகர்கள் (diehard-ஆமாம்) கூட சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் அவர்கள் மனதைரியத்தோடு அந்த சீனுக்கும் கைதட்டினதுக்கு கம்பெனி சார்பா எதாவது பொருள் கொடுத்திருக்கலாம் தலைவரு.

இப்போ இங்கதான் முக்கியமான விசயமே! கன்னட நடிகர் அம்பரீசின் 60-வது பிறந்தநாள் விழா பெங்களூரில் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினியும் அதில் கலந்துக்கொண்டாராம். இவ்ளோ நாள் மக்களை ஏமாத்துனது பத்தாதுன்னு வுட்டாரு பாரு ஒரு டயலாக்கு, "புகைப் பிடிப்பதை நான் விட்டுவிட்டேன். அதேபோல் நீயும் (அம்பரீசை பார்த்து) விட்டுவிடு!" அப்பிடின்னு சொன்னாராம். போன வருஷம் என்ன நடந்துச்சுன்னு ஊருக்கே தெரியுமே? உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு உலக ரசிகர்களே பிரார்த்தனை செய்தார்கள். அதில் இத்தனைநாள் தலைவர் தங்களுக்கு மொட்டை அடித்துவிட்டார் என்ற விவரம் புரியாமல் பலநூறு பக்தர்கள் அவருக்கு மொட்டைப் போட்டு வேண்டுதல் செய்தனர். எப்படியோ இறைவன் புண்ணியத்தில் உடல்நலம் சரியாகி திரும்ப நன்றாக வந்து பல படப்பிடிப்புகளிலும் கலந்துக்கொண்டு வருகிறார். இவ்வளவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று கூறுவது ஒன்றும் அதிசயமில்ல. பின்ன! இதுக்கு மேல இழுத்தா காது உட்பட எல்லா ஓட்டைகளிலும் இருந்துதான் புகைவருமே? இதுக்குமேல நிறுத்தினா என்ன நிறுத்தாட்டி தான் என்னவாம்? "கிரிக்கெட்டுக்கு சச்சின்; சிகரெட்டுக்கு ரஜினி" என்பது போல, பல இளைஞர்கள் சிகரெட் பிடிப்பதற்கு முக்கியமான இன்ஸ்பிரேஷனே தலைவர் தானே? அவர் நிறுத்திவிட்டாலும் இன்னும் புகைப்பழக்கத்திற்கு ஆளாகி அதிலிருந்து மீளமுடியாதவர்கள் கதியென்ன? அவர்களுக்கும் உயிர்க்கொல்லி நோய் வந்து தப்பித்து பிழைத்துவந்துதான் திருந்த வேண்டுமா? துரதிருஷ்டவசமாக இவரது ரசிகர்கள் அனைவருமே பணம் படைத்தவர்களும் கிடையாது! ஆட்டோ ஓட்டுபவர்களும், ரிக்ஷா ஓட்டுபவர்களும், சித்தாளும், இந்த மாதிரியான ஏழை மற்றும் நடுத்தர வசதி படைத்தவர்கள் தானே இருக்கின்றனர். இவர்கள் பட்டு தான் திருந்தவேண்டுமேன்பது ஒரே வழியென்றால் எத்தனை பேர் தான் மிஞ்சுவர்? சரி அத விடுங்க! அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? "தலைவரே சொல்லிட்டார் நான் இனி புகைக்க மாட்டேன்!", "தலைவர் எவ்வளவு சிம்பிள் பார்த்தியா?", "இதனால் தான் நான் இன்னும் அவர் ரசிகராக இருக்குறேன்!" இப்பிடின்னு அவருடைய ஆஸ்தான, தோஸ்தான ரசிகர்கள் கிளப்பிவிட்டு, உடனே அவர் ரசிகர்கள் வைத்து நடத்துகிற 'பேஸ்புக்' பக்கங்கள் அவர் சொன்ன கருத்துகளையும்(?!), அவர் படங்களையும் சேர்த்து போட்டு அவரை 'மனிதர்குல மாணிக்கம்' ஆக்கிவிடுவது நிச்சயம். வழக்கம் போல அதையெல்லாம் பார்த்து கடந்து வரும்போது ஒரு 'லைக்'கோடு நின்றுவிட வேண்டியதாயிருக்கிறது!
இன்று (மே-31) புகையிலை ஒழிப்பு தினம்!
<source: http://www.twitlonger.com/show/hksi5l