Thursday, May 29, 2014

பேண்ட் ஜிப்

ஓர் ஆண் எதிர்கொள்ள நேருகிற உச்சபட்ச சங்கடங்களில் ஒன்று பேண்ட் ஜிப் போடாதது. இதற்கு இணையான பெண்களின் சங்கடம் என்னவென்றால் பிராவின் பட்டை சுடிதாருக்கோ, ஜாக்கெட்டுக்கோ வெளியே தெரிவதை சொல்லலாம். ஒரு பெண்ணின் பிரா பட்டை வெளியே தெரிந்தால், அதை சுட்டிக்காட்ட சக பெண்கள் ஏதோ ‘கோட் வேர்ட்’ உருவாக்கியிருக்கிறார்கள். ஆண்கள் மக்குகள். இம்மாதிரி டெக்னிக்குகள் எதுவும் அவர்களுக்குள் இல்லை. அல்லது ‘அசிங்கப்படட்டும் ஆட்டோக்காரன்’ என்று வாளாவிருந்து விடுகிறார்கள்.

பேண்ட் ஜிப் போட மறப்பது என்பது ஆடிக்கொரு முறை, அமாவசைக்கு ஒரு முறை நடந்தாலும் யாராவது ஒருவர் சிரித்துக்கொண்டே ”ஜிப்பை போடுங்க பாஸ்” எனும்போது கொஞ்சம் லஜ்ஜையாகதான் இருக்கிறது. ஒருமுறை நந்தனம் பெரியார் மாளிகை அருகே பஸ்ஸுக்கு நின்றிருந்தேன். வழக்கம்போல ஜிப் போட மறந்திருந்தேன். கூலிங் க்ளாஸ் அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் “மிஸ்டர், ஜிப்” என்று சொல்லிவிட்டு வந்த பஸ்ஸில் ஏறினார். ’கருட கர்வ பங்கம்’ என்றால் என்னவென்று அன்றுதான் புரிந்தது. நானும் அதே பஸ்ஸில்தான் ஏறியிருக்க வேண்டும். வெட்கப்பட்டுக்கொண்டு அப்படியே திரும்பி ஜிப்பை சரிசெய்துவிட்டு, மனவுளைச்சல் காரணமாக தேனாம்பேட்டைக்கு நடந்தே போய்விட்டேன்.

மறதி நம்முடைய தேசிய வியாதி என்பதால் இந்த சங்கடச்சூழலை கூட மனமுவந்து ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அரிதிலும் அரிதாக சில நேரங்களில் ஜிப் ரிப்பேர் ஆகி தொலைத்துவிடுகிறது. நாம் கான்சியஸ்ஸாக மூடினாலும் கூட அதுவாகவே பழுது காரணமாக திறந்து தொலைத்துவிடுகிறது. அல்லது பாதியில் சிக்கிக்கொண்டு உயிரெடுக்கிறது. இதில் பெரிய தொல்லை என்னவென்றால் அது ரிப்பேர் ஆகிவிட்டது என்றுகூட தெரியாமல், ‘பர்ஃபெக்டா மூடி பாதுகாத்துவிட்டோம்’ என்கிற பெருமையில் நாம் திளைத்திருக்கும்போது, பப்பரப்பா என்று திறந்துக்கொண்டு கேவலப்படுத்திவிடுகிறது. “என்ன தலைவா. இன்னிக்கு ஆரஞ்சு அண்டர்வேரா?” என்று யாராவது நம்மை கலாய்க்கும்போதுதான் ‘தேவனே, எம்மை ஏன் கைவிட்டீர்!’ என்று பரலோகப் பிதாவிடம் மனமுருக கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. அதிலும் ‘இன்’ செய்திருக்கும்போதோ அல்லது ஷார்ட் சர்ட் போட்டிருக்கும்போதோ, ஜிப் மக்கர் செய்துவிட்டால் அதைவிட கொடுமையான பரிதாபமான நிலைமை ஆணுக்கு வேறில்லை.

ஒரு ஆணுடைய கஷ்டம் இன்னொரு ஆணுக்குதான் தெரியும். இந்த ஸ்டேட்டஸை படிக்கும் ஆண் விஞ்ஞானிகள் யாராவது இருந்தால் ஜிப் தேவைப்படாமல் நம்முடைய மானத்தை காத்துக்கொள்ளும் ஃபார்மல் பேண்டுக்கான தொழில்நுட்பத்தை கண்டறிந்து ஆணினத்தின் மாண்பை காக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்


No comments:

Post a Comment