Sunday, February 2, 2014

செல்லக் குழந்தைகளே


 - கானா பிரபா @kanapraba


பாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம்

தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது "காயத்ரி" என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. காயத்ரி நாவலின் முடிவில் சொல்லப்பட்ட விடயங்களைச் சினிமாவுக்குப் பொருந்தாது என்று திரைக்கதை அமைத்த பஞ்சு அருணாசலம் மாற்றி விட்டார் என்று எழுத்தாளர் சுஜாதா தன் குறிப்புக்களில் சொல்லியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் "காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்" அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் அறிமுகத்துக்குத் துணை போன பெருமையோடு அவரின் ஆரம்பகாலப் படங்களுக்குப் பெருவாரியாகப் பாடல்கள் எழுதிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தவகையில் அமைந்தது தான் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் என்று சங்கதிகளைக் குரலிசையாக பொருத்தியிருப்பது சிறப்பு. ஒரு திகில் படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா

http://www.youtube.com/watch?v=NI3ouIRVSfQ&sns=em


ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது "கவிக்குயில்" வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது "காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ" இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய "காதல் ஓவியம் கண்டேன்" பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். "காதல் ஓவியம் கண்டேன் கனவோ" 34 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.
http://www.youtube.com/watch?v=IZ0Nc1smXj0&sns=em

மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் "கா" என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.

சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.


பி.கு: சுஜாதாவின் குரலில் வந்த "ஒரு இனிய மனது" பாடல் "ஜானி" திரைப்படத் இந்தப் பாடல் ஜென்சி, சுஜாதா குரல்களில் தனித்தனியாக வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மை டியர் குட்டிச் சாத்தான் படத்தில் வாணி ஜெயராமோடு சேர்ந்து "செல்லக் குழந்தைகளே" பாடலையும் சுஜாதா பாடியிருந்தார்.



No comments:

Post a Comment