Thursday, September 17, 2015

பெரியார் யார்

பெரியார் யார் ? ? அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என நக்கலாய் பேசும் நண்பர்களின் பார்வைக்காக ..........
1. தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 40 ஆண்டுகளுக்கு மேலாய் மக்கள் பணியில் ஈடுபட்டவர்,
2. செல்வக் குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி) சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்.
3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாய் மாற்றாதவர், அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணி செய்தவர்,
4. விதவை மறுமணத்தை ஆதரித்தவர்
5. மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.
6. ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன எனவே மதத்தை தூக்கி எறிந்தவர்.
7. இல்லாத கடவுளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் சொல்லி, மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர்.
8. சாதாரண லுங்கியையும் சட்டையையும் விரும்பிய எளிமையான பகுத்தறிவுவாதி
9. மக்களுக்கு பிடித்தமான மதத்தை எதிர்த்து மக்களின் விரோதத்தை சம்பாதித்தவர், மக்களோடு ஒத்து ஊதி அரசியல் பண்ணத் தெரியாதவர். மக்களுக்கு பிடித்ததை செய்வதை விட தேவையானதை செய்ய முனைந்தவர்.
10. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என கர்ஜித்தவர்.
11. பக்தி வந்தால் புத்தி போய் விடும், புத்தி வந்தால் பக்தி போய் விடும் என தத்துவம் பேசியவர்.
12. தம் இயக்கத் தோழர்களை சாதி மறுப்பு - மத மறுப்பு - விதவை மறுமணம் செய்து கொள்ளத் தூண்டியவர்.
13. பெண்ணுரிமைப் போராளி, கணவனுக்கு இல்லாமல் மனைவிக்கு மட்டும் ஏன் தாலி எனக் கேட்டு ஆண் சமூகத்தை அதிரச் செய்தவர்.
14. பெரியாரிடம் பலர் உங்கள் எல்லாக் கொள்கையும் பிடித்திருக்கிறது கடவுள் மறுப்பைத் தவிர என சொல்லிய போது, கை நல்லா இருக்கு கால் நல்லா இருக்கு மூக்கு முழி எல்லாமே நல்லா இருக்கு உயிர் மட்டும் தான் பிடிக்க வில்லை எனச் சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது என பதிலளித்து அவர்களின் வாயை அடைத்தவர்.
15. நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன், அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நீ உணரும் கடவுளை என்னால் உணர முடியவில்லை அதனால் கடவுளை மறுக்கிறேன் என கடவுள் மறுப்புக்கு விளக்கம் சொன்னவர். -
Prakash JP

No comments:

Post a Comment