Wednesday, June 26, 2013

விடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்? பார்ட்-2


Doha Talkies @dohatalkies


26th June 2013 from TwitLonger 

விடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்? பார்ட்-2

விமர்சனங்களை வெளியில் சொன்னபோது எனது மூத்தவர்கள், நான் வழிகாட்டிகள் என்று நம்பியவர்கள் எனக்கு சொன்னதை நம்பினேன் . “போர்க்களத்தில் நிற்கும் ஆயுத குழுக்களின் நியாயங்கள் எல்லா நேரத்திலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. எனவே அவர்களை நாமும் விமர்சித்து அவர்களின் அழிவுக்கு காரணமாக இருந்துவிடக் கூடாது” என்பது எனது ஆசான்களால் எனக்கு சொல்லப்பட்ட அறிவுரை. அதை எனது அறிவு முழுமையாக ஏற்காத நிலையிலும், உணர்வு ரீதியாக ஈழப்பிரச்சனையை பார்த்துப் பழகிய நான் , அரசியல் அனுபவஸ்தர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை செய்வதாக நினைத்து அமைதி காத்தேன் பெரிதாக பேசவில்லை.

ஆனால் 2009 ஆம் ஆண்டைய ஈழத்தின் இறுதிப் போரின்போது புலிகளும் அதன் தலைமையும் நடந்துகொண்ட விதம், எனது அமைதியை உடைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. ஆம் எந்த ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு விடுதலைப்புலிகள் அரணாக இருப்பார்கள் என்று எங்களுக்கு எல்லாம் போதிக்கப்பட்டதோ, அந்த ஈழத்தமிழர்களையே விடுதலைப்புலிகள் தங்களுக்கான பாதுகாப்பு கவசமாக,, மனித கேடயமாக பயன்படுத்துவதை அறிந்தபோது முதல் அதிர்ச்சி உருவானது.

அடுத்த அதிர்ச்சி, தங்கள் கட்டுப்பாட்டுபிரதேசத்தில் இருக்கும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பலவந்தமாக போர்க்களமுனைக்கு அனுப்பிய அவர்களின் செயலும், இறுதியில் புலிகளிடமிருந்து விடுபட நினைத்த சாதாரண தமிழர்களை விடுதலைப்புலிகளே ஈவு ஈரக்கமின்றி சுட்டுக்கொன்ற நிகழ்வுகளும் விடுதலைப்புலிகள் மீதான எல்லா பிரமைகளையும் நம்பிக்கைகளையும் தகர்த்துவிட்டது.

ஈழப்போரின் இறுதி கட்டத்தில் இலங்கை ராணுவம் செய்த அட்டூழியங்களுக்கு சற்றும் குறையாமல் விடுதலைப்புலிகளும் செய்தார்கள். அந்த இறுதி கட்ட உயிரிழப்புக்களை தடுக்க சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்களை இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் தலைமை இதை நிராகரித்தது.

அந்த நிலையிலும் கூட புலிகள், பிரபாகரன் குறித்த விமர்சனங்களை வெளியில் சொல்லவேண்டிய தேவை உருவாகவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். பிரபாகரனும் அவரது ஒட்டுமொத்த குடும்பமும், விடுதலைப்புலிகள் என்கிற அமைப்பும் முற்றாக அழிந்துவிட்ட நிலையில் அவர்கள் குறித்து பேசி என்னபயன் என்பதாக நான் அமைதியானேன் . இரண்டாவது காரணம் போரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் முகாம்களில் அடைபட்டு கிடக்கும் நிலையில் அழிந்துபோன புலிகளின் தவறுகளை பேசி என்ன பயன் என்பதாலும் அமைதியானேன்.
http://tl.gd/n_1rl1d6h

No comments:

Post a Comment