Monday, April 28, 2014

கற்றது தமிழ் படம் பற்றி dagalti யின் அருமையான விமர்சனம்

கற்றது தமிழ்" படம் பற்றி @dagalti யின் அருமையான விமர்சனம்/கருத்து/பார்வை. From Archieves. #MUSTREAD

"காரணங்கள் எல்லாம் கதையில் தான் வரும். வாழ்க்கையில் தர்க்கங்களுக்கு இடம் கிடையாது". இது கற்றது தமிழ் திரைப்படத்தில் வசனமாக வரும் மையக்கரு. கதையில் மையக்கரு தேடுவதென்பதே ஒழுங்கையும் கோர்வையையும் தேடும் மனப்பாங்கு தான். அந்த ஒழுங்கே, மூச்சுத்திணரடிக்கும் கட்டமைப்பாகவும் பார்க்கலாம். இப்படியிருக்க, வாழ்க்கையில் மையக்கரு தேடுவது என்பது மாபெரும் அபத்தம் தான்.

எல்லோருக்கும் புரிவதற்கு எளிதாக இருக்கவேண்டும் என்று வாழ்க்கைக்கு தெரிகிறதா என்ன ! அதன் பாட்டிற்கு கோர்வையற்ற நிகழ்வுகளையும், விளக்க முடியாத அழுத்தங்களையும் அடுக்கிவிட்டு விளங்கிக்கொள்ளவே முடியாத செயல்களையும் செய்வித்து சென்றுவிடுகிறது. அதை சகலோருக்கும் புரியும் வகையில் விளக்கங்கள் சொல்ல வேண்டி உள்ளது. நாளிடைவில் அந்த விளக்கங்களே நம்பிக்கைகளாக நிலைத்துவிடுகின்றன.

என் செயல்களுக்கு காரணம் தேடாதே அவற்றை உனக்கு விளக்க நான் முயலவில்லை, என்று நாயகன் பிரபாகர் சொல்லிக்கொண்டே இருந்தாலும் அதையும் மீறி அவற்றைத் தேடும் ஒழுங்குவிரும்பிகளாகவே நாம் இருப்போம். இதை மனித இயல்பு என்ற தட்டையான வார்த்தைகளால் சொல்லலாம். ஆனால், சுதந்திரம் துறந்து, ஒரு கட்டமைக்குள்ளே எதிர்பார்ப்புக்கள் வைத்துக்கொண்டுவிட்டதை "இயல்பு" என்று சொல்கிறோமே என்ற பிரக்ஞையோடு தான் சொல்ல முடிகிறது.

தன்மையில் சொல்லப்படும் கதைகளில் எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. வாய்ஸ் ஓவர் என்பது நாவல் வடிவத்திலிருந்து முழுவதும் திரையெழுத்தாக மாறமுடியாமல் போனதின் எச்சம் தான். இருந்தாலும் இந்தப் படத்தில் வரும் பிரமாதமான வசனங்களை வேறு எந்த வடிவிலும் போட்டிருக்க முடியாது.தன் தோழி ஆனந்தியைத் தேடி பிரபாகர் செல்லும் அந்த மகாராஷ்ட்ரா பயணத்தில், அவன் நினைப்பதை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்காது. அவன் நினைப்பதை நாம் கேட்பது அவன் உரையாடல்களுக்குப் பின் இயங்கும் அவன் மனப்போக்கை நமக்குக் காட்டுகின்றன.
கலைஞன் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஆனால் அவன் செய்வது பிரசங்கம் அல்ல. பிரசங்கத்தின் நோக்கம் கேட்பவனை மாற்றுவது. கலைஞனின் நோக்கம் சொல்வது மட்டுமே, கருத்துப் பறிமாற்ம் அன்று. இதைச் சொல்லும் பொட்டுத் தெறிக்கும் வசனம் (பிரபாகரின் "வாக்குமூலத்தை" பதிவு செய்யும் வீடியோக்ராஃபர் கருணாஸ் தன் கருத்தை சொல்ல முயல, பிரபாகர் இடைமறித்துப் பேசும் வசனம்): "உன்னை ரெகார்ட் பண்ண தான் கூப்பிட்டேன், அட்வைஸ் பண்ண இல்ல"

கருணாஸ் ஏற்றிருக்கும் பாத்திரம் பார்வையாளரின் மனநிலையை/ எண்ணத்தையும் எள்ளலையும் பிரதிபலிக்க உருவாக்கப்பட்டது. இது புத்திசாலித்தனமாக கையாளப்பட்ட உத்தி. பிரபாகரின் தனது செயல்களுக்குக் சொல்லும் காரணங்களையும் "இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா" என்கிற தொனியில் பேசுவது அழகாக வந்திருக்கிறது. ஒரே விஷயம் ஒருவனை கொலைக்கும் தூண்டும் ஒருவனுக்கு இயல்பாக இருக்கும் என்பதை சொல்வதிலேயே, இந்தப் படம் உச்சத்தை எட்டுகிறது.

கொலையப்பற்றிப் பேசும் பொழுது: கண்ணை மூடினால் பரவசம், கண்ணைத் திறந்ததும் அருவெறுப்பு எனற உவமை
கோபாளித்தனமாக இல்லாமல் பிரமிப்பாக இருப்பதற்கு காரணம் ஜீவாவின் நடிப்பு. புதுமுகம் அஞ்சலி, வாத்தியார் அழகம்பெருமாள் என்று கிட்டத்தட்ட அனைவரின் நடிப்புமே அப்படித் தான்.

தற்கொலைக்கு முன் கடிதம் எழுதி வைப்பது ஒரு சடங்கு என்று தொடங்கி கலக்கம் தரும் வசனம் படம் நெடுக. இவ்வள்வு சிறப்பான வசனங்களுடன் தமிழ் படம் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது. என் கணக்குப்படி மூன்றரை வருடங்கள் :P
வசனம் பேசி மாய்வதுதான் நாம் எப்போதும் செய்வதாயிற்றே, படிமங்கள். இதோ ஒரு அரிசி பதம் : சாக்பீஸோ விபூதியோ ஏறி எப்போதும் வெள்ளையாக இருக்கும் விரல்நுனியை வைத்து வாத்தியார் சடலத்தை அடையாளம் கண்டுகொண்டுள்கிறான் பிரபாகர்.

காண்பிப்பதுவே கலைஞனின் வேலை நியாயப்படுத்துவது அல்ல என்பதை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ராம். நியாயம் என்று நாம் கருதுபவற்றில் இருந்து ஒருவன் விலகிவிட்டதாலேயே அவன் வலி பொய்யாகிவிடுவதில்லை. ஒருவனைப் புரிந்துகொள்ள, குறைந்தபட்சம் உணர்ந்துகொள்ள, அவன் தர்க்கங்களை ஒத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதையும், நம்மிடையே விடையில்லா கேள்விகள் உண்டு என்பதையும் ஒத்துக்கொள்ள முடியுமென்றால் இந்த படத்தை அவசியம் பாருங்கள். குறைகள் பெரிதாக தெரியாது.

இந்தப் பதிவு விமர்சனமாக அமையவில்லை. ஒரு நல்ல படத்தைப் பார்த்த உடன் தோன்றும் (எழுதப்படும்) கருத்துக்கள் அநேகமாக படத்தைப் பற்றி இருக்காது. அது நம்மேல் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியே இருக்கும். இந்த பதிவு அப்படி அமைந்துவிட்டது என்பதே இந்த திரைப்படத்தின் விமர்சனமாக எடுத்துக் கொள்ளலாம்.

நிறைவு வர மேலும் கொஞ்சம் அசை போட வேண்டும். இப்போதைக்கு இவ்வளவு.

No comments:

Post a Comment