Saturday, May 4, 2013

விகடன் - ரஹ்மான் 20 - ஷாஜி

"யாருடா இந்த 'ஏ.ஆர்.ரஹ்மான்’? மணிரத்னம் படம்னா, இளையராஜாதானே மியூஸிக் போடுவாரு? தெரியாம வாங்கிட்டேன். நீ வேணாக் கேளு'' என்று சொல்லி 'ரோஜா’ திரைப்படத்தின் ஒலிநாடாவை என்னிடம் வீசி விட்டுப் போனார் தமிழ் படிக்கத் தெரியாத எனது நண்பர் பத்மகுமார். காலம் 1992-ன் இறுதி. இடம்: ஹைதராபாத். எனக்குமே அந்தப் படத்தின் இசையை இளையராஜா அமைக்கவில்லை என்பது ஏமாற்றமாகத்தான் இருந்தது. 'பல்லவி அனுபல்லவி’ என்ற தனது முதல் படம் தொடங்கி, 'தளபதி’ வரைக்குமான மணிரத்னத்தின் எல்லாப் படங்களிலும் இளையராஜாவின் அற்புதமான இசையைத்தானே கேட்டு வந்தோம். அதனாலேயே ஓரிரு நாட்கள் கழித்துத்தான் 'ரோஜா’வின் ஒலிநாடாவை அலட் சியமாகக் கேட்கத் தொடங்கினேன். ஆனால், சில நொடிகளிலேயே 'சின்னச் சின்ன ஆசை’ என்னைச் சாய்த்துவிட்டது. பாப் மார்லி, டெஸ்மண்ட் டெக்கர், யூ பி 40 போன்றவர்களின் ரேகே இசை பாணியில் இதோ தமிழில் உலகத்தரமான ஒரு பாடல். எளிமையான இசைதான். ஆனால், இங்கு நாம் கேட்டு வந்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசை அமைப்பு. ஒன்றுக்கொன்று இடைஞ்சல் இல்லாமல் பல அடுக்குகளாக அமைக்கப்பட்ட அந்த இசையின் ஒலி, எனது அப்போதைய தரம் இல்லாத ஒலிக் கருவியில் இருந்துகூடத் தரத்துடன் ஒலித்தது. 'தமிழா... தமிழா...’ பாடலும் முதல் கேட்டலிலேயே என்னை மிகவும் கவர்ந்தது. மற்ற பாடல்களும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளேறி மனதில் இடம்பிடித்தது. 'ரோஜா’ பாடல்கள் விரைவில் இந்தியிலும் வெளிவந்து முழு இந்தியா வின் கவனத்தையும் கவர்ந்தது. தமிழில் இருந்து ஓர் அகில இந்திய இசையமைப்பாளர் உருவானார். 'ரோஜா’வின் இந்தி இசைத்தொகுப்பை வெளியிட்டு விற்பனையில் சாதனை படைத்த மேக்னா சவுண்ட் நிறுவனத்தின் கலைஞர்கள் மற்றும் இசைப்பதிவு மேலாளராக நான் பின்னர் இணைந்தேன் என்பது சுவாரஸ்யமான ஒரு தற்செயல். அதற்குள் 'புதிய முகம்’, 'ஜென்டில்மேன்’, 'கிழக்குச் சீமையிலே’, 'உழவன்’, 'திருடா திருடா’ எனும் படங்கள் தமிழிலும் 'யோதா’ எனும் படம் மலையாளத்திலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்திருந்தன. அதில் 'புதிய முகம்’, 'திருடா திருடா’ படங்களின் இசைத் தொகுப்புகளையும் எங்கள் நிறுவனம்தான் வெளியிட்டது. தொடக்கத்தில் பல ஆண்டுகள் அவரது பெயர் ஏ.ஆர்.ரகுமான் என்றுதான் தமிழில் எழுதப்பட்டு வந்தது. பின்னர்தான் அது ஏ.ஆர். ரஹ்மான் ஆனது. 'ரோஜா’வுக்கு முன்பு ஏ.எஸ்.திலீப்குமார் என்ற பெயரில் அவர் மலேசியா வாசுதேவன் பாடிய 'டிஸ்கோ டிஸ்கோ’, மால்குடி சுபா பாடிய 'செட் மீ ஃப்ரீ’ எனும் இரண்டு தனியார் பாடல் தொகுதிகளை எங்கள் நிறுவனம் வழியாக வெளியிட்டு இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையையும் தனித்துவம் வாய்ந்த அவரது ஒலியையும் தொடர்ந்து, அவதானித்தும் ரசித்தும் வந்திருக்கிறேன். பஞ்சதன் என்று பெயரிடப்பட்ட ரஹ்மானின் முதல் ஒலிப் பதிவகத்தை வடிவமைத்து, அவரது முதல் பாடலான 'சின்னச் சின்ன’ ஆசையின் ஒலியமைப்பில் அவரை வழிநடத்தியவர் ஒலிப்பதிவு மேதை எம்மி. 1984-88 காலகட்டத்தில் வெளிவந்த இளையராஜாவின் பல பாடல்களில் நாம் கேட்ட சிறந்த ஒலி நேர்த்தியை உருவாக்கியவர் இவரே. பின்னர் ஹெச்.ஸ்ரீதரின் ஒலி அமைப்பு வல்லமை ரஹ்மானின் இசைக்குப் பல வண்ணங்களைக் கொடுத்தது. ஆஸ்கர் விருது பெற்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்’ வரைக்கும் ஸ்ரீதரின் ஒலியமைப்புத் திறன் ரஹ்மானுக்கு உதவியது. வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், ஒலியமைப்பாளர்கள் வேறு வேறாக இருந்தபோதிலும் ரஹ்மானின் இசையலி எப்போதுமே அவருக்கே உரிய தனித் துவத்துடன் இருந்தது என்பதுதான். இசைத் தரம் குறைவான அவரது பாடல்களிலும்கூட உலகத்தரமான ஒலி நேர்த்தியைத்தான் நாம் கேட்க முடிந்தது. ரஹ்மானின் இசைக்கு ரசிகர்களின் ஆதரவு ஒவ்வொரு நாளும் அதிகரித்தது. 'இந்தியன்’, 'காதல் தேசம்’, 'மின்சாரக் கனவு’, 'இருவர்’, 'ஜீன்ஸ்’, 'படையப்பா’, 'காதலர் தினம்’, 'முதல்வன்’, 'அலைபாயுதே’, 'தெனாலி’, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ எனத் தமிழிலும்... 'தில்ஸே’, 'தால்’, 'லகான்’, 'ரங் தே பஸந்தி’ என இந்தியிலும்... 'வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அண்ட் எர்த்’, 'எலிசபெத்: தி கோல்டன் ஏஜ்’, 'ஸ்லம்டாக் மில்லியனர்’, 'கப்பிள்ஸ் ரிட்ரீட்’, '127 ஹவர்ஸ்’ என உலக சினிமாவிலும் தனது இசைத் தடத்தைப் பதித்துவருகிறார் ரஹ்மான். திரை இசைக்கு வெளியே வந்தே மாதரம், செம்மொழியான தமிழ் மொழியாம், ப்ரே ஃபார் மீ பிரதர் போன்ற பல இசைப் பாடல்களையும் வெளியிட்டு வெற்றிபெற்றார். 20 ஆண்டுகள் தாண்டிய அவரது இசைப் பயணத்தில் ரசிகர்களின் ஆதரவிலும் வணிக வெற்றியிலும் அவர் முதல் இடத்தில்தான் எப்போதுமே இருந்திருக்கிறார் என்றபோதிலும், அது அவருக்கு எளிதானதாக இருந்தது இல்லை என்றே சொல்வேன். அவரது ஒவ்வொரு இசைத்தொகுப்பு வெளிவரும்போதும் அவற்றின் மேல் எந்த நியாயமும் இல்லாத விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டேஇருந்தனர் சிலர். ரசிகர்களைவிட இசைத் துறையைச் சார்ந்தவர்களே இதை அதிகமாகச் செய்துவந்தனர். 1996-ல் ரஹ்மானின் 'லவ் பேர்ட்ஸ்’ படத் தில் பாடல்கள் வெளிவந்த சமயம். அதில் உள்ள 'மலர்களே மலர்களே... இது என்ன கனவா?’, 'நாளைய உலகம் இல்லைஎன்றானால்’, 'சாம்பா சாம்பா’, 'கமான் கமான் ஓ காமாட்சி’ போன்ற பாடல்களின் புதுமை யிலும் இசைத் தரத்திலும் ஒலி நேர்த்தியிலும் வியந்துபோய் இருந்த என்னிடம், 'இசை என்ற பெயரில் இவர் என்ன தான் செய்கிறார்? 'லவ் பேர்ட்ஸ்’ பாடல்களைக் கேட்டேன். சகிக்கல!’ என்று ஓர் இசையமைப்பாளர் சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. இப்போது சிலர் திரைப்படங்களின் முதல் காட்சியைப் பார்த்து இடைவேளையிலேயே 'படம் சரியில்லை’ என்று குறுஞ்செய்திப் பிரசாரம் செய்வதுபோல், ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு இசைத்தொகுப்பு வெளிவரும்போதும், 'சரியில்லை’, 'போன தொகுப்புபோல் இல்லை’, 'இரைச்சலாக இருக்கிறது’ என்ற பிரசாரங்களும் முழக்கங்களும் இங்கிருந்து வந்திருக்கின்றன. ஆனால், அதே பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து பெரும் வெற்றிகளாகவே மாறிஇருக்கின்றன! அவரது பல பாடல்கள் தழுவல்கள் என்ற குற்றச்சாட்டையும் சந்தித்திருக்கின்றன. எந்த ஓர் இசை வகையையும் தாழ்ந்தது என்று தள்ளிவைக்காமல் இந்திய, உலக இசையின் எண்ணற்ற வடிவங்களைத் தொடர்ந்து கேட்டும் அவதானித்தும் வரும் ரஹ்மானின் இசையில் மொசார்ட், பீட்டர் கேப்ரியேல், டாக்டர் அல்பேன், நுஸ்ரத் ஃபதே அலிகான், பால் யங் எனப் பல பாதிப்புகள் இருப்பதில் பெரிய வியப்பு ஒன்றும் இல்லை. எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் முற்றிலுமாகத் தன்னாலேயே உருவாக்கப்படுவதுதான் தனது இசை என்று இதுவரைக்கும் அவர் எங்கேயும் குறிப்பிட்டதாகவும் தெரியவில்லை. தனது இசை வாழ்க்கையின் 20-ஆவது ஆண்டில் ரஹ்மான் வெளியிட்டிருக்கும் 'கடல்’ திரைப்படப் பாடல்களின் இசை உலகத் தரமானது. இந்திய, உலக இசையின் பல தெறிப்புகளைக் கடலின் இசையில் அசாத்தியமாக இணைத்திருக்கிறார். 'ஏலே! கீச்சான் வந்தாச்சு’ என்ற பாடலில் அமெரிக்க இசை வடிவமான கன்ட்ரி இசையுடன் கேரளத்து நாட்டுப்புற இசையான வஞ்சிப் பாட்டும் சங்கமிக்கிறது. 'அடியே’ என்கின்ற பாடலில் அமெரிக்கக் கறுப்பின் இசையான ப்ளூஸுடன் நமது ஒப்பாரிப் பாடல்களின் கூறுகளையும் நாம் கேட்கலாம். 'நெஞ்சுக்குள்ளே’ பாடல் நமது நாட்டுப்புற இசையான தெம்மாங்குடன் லத்தீன் அமெரிக்க இசையும் மேற்கத்திய செவ்வியல் இசையும் சேரும் இனிய கலவை! ஏ.ஆர்.ரஹ்மானின் அசாத்தியமான படைப்பூக்கம் கேட்கக் கிடைக்கும் இந்த பாடல்களையும் சுவாரஸ்யமற்றவை என்றோ தழுவல்கள் என்றோ சொல்கிறவர்கள் இருக்கலாம். ஆனால், அப்படித் தூக்கி வீசுகிறவர்களே பிறிதொரு நாளில் அந்தப் பாடல்களைப் பாடித் திரிவார்கள். வாழ்க்கை மிக வேகமாக நகரும் இந்தக் காலகட்டத்திலும் ஒரு பாடலை அதன் நுட்பங்களினால் மீண்டும் மீண்டும் கேட்கவைத்து, மெள்ள மெள்ள அதைப் பல காலம் நீடிக்கும் ஒரு வெற்றிப் பாடலாக்கும் இந்த மந்திர ஜாலம்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மிகப் பெரிய ஆச்சர்யம். ஒரு பனித்துளிக்குள் தெரியும் நீலவானம்போல், ஒரு ரோஜா மொட்டில் ஒளிந்திருக்கும் வசந்த காலம்போல் அது மெதுவாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது!

No comments:

Post a Comment