Wednesday, June 19, 2013

முழுக்க முழுக்க கற்பனை

நீயா?நானா? (16-06-2013) திரைக்குப்பின் நடந்தது என்ன? முழுக்க முழுக்க கற்பனை மட்டுமே கலந்த கட்டுக்கதை இது...

டுவிட்டர், முகநூல், பதிவுலகம் மூன்றிலும் விஜய் தொலைக்காட்சியின் நீயா?நானா? நிகழ்ச்சி எப்போது என்ன தலைப்பில் ஒளிபரப்பானாலும் விமர்சனக் கணைகள் பாயும். நிகழ்ச்சியை திரையிலே நடத்தும் கோபிநாத் அவர்களும், திரைக்குப்பின் நிர்வகிக்கும் அந்தோணி அவர்களை நோக்கி தலைப்பு தேர்வு செய்ததிலிருந்து, நிகழ்ச்சி நெறிசெய்யப்பட்ட முறைகள், அரங்கத்தில் குளிரூட்டி செயல்பட்ட முறை, நாற்காலிகள் ஒழுங்கு செய்யப்பட்ட முறை, அழைக்கப்பட்ட விருந்தினர் யார், இறுதியில் எட்டப்பட்ட தீர்வுகள் ஆலோசனைகள் உட்பட அனைத்தையும் அப்படிச்செய்திருக்கலாமே, இப்படிச்செய்திருக்கலாமே என ஆலோசனைகள் குவியும்.

இவைதவிர சில நிகழ்ச்சிகள் அவரவர் மனதிற்குப் பிடித்திருந்தால் பாராட்டும் சம்பவங்களும் நடக்கும்.

பாராட்டுகள்தான் எப்போதுமே மனதில் தங்குவதில்லை... விமர்சனக் கருத்துகள் புளி போட்டு விளக்கினாலும் மனதை விட்டு விலகுவதில்லை. இதற்கு விஜய் தொலைக்காட்சியும் நீயா?நானா? குழு மட்டும் விதிவிலக்கா என்ன? அவர்களும் ஒரு முடிவெடுத்தார்கள். தம்மை நோக்கி வீசப்படும் விமர்சனக்கணைகள் வருவதைத் தடுக்க வேண்டும். ஆலோசகர் திருவாளர் நோக்கியா அவர்களிடம் சரணடைந்தது தயாரிப்புக் குழு.

திருவாளர் நோக்கியா ஒரு உபாயக் கிட்டங்கி. காதல் விவகாரமாக இருந்தாலும் சரி, கார்ப்பொரேட் விவகாரமாக இருந்தாலும் சரி, அரசியல் காய் நகர்த்தலா இருந்தாலும் சரி.. இக்கட்டான நிலைமை வந்தால் எல்லாருக்கும் பளிச்சுனு மனசுக்கு வரும் பேருதான் நோக்கியா. அவரும் அக்கடானு ஐடியாவைத் தூக்கி வீசுவாரு... நம்மாளுங்க கபால்னு கவ்விட்டு வந்துடுவாங்க. இன்றைய தேதிக்கு அவரோட ஐடியாவுக்கெல்லாம் சக்சஸ் ரேட் 90%க்கு மேலனா பார்த்துக்கிடுங்க.

நீயா?நானா?குழுவை மேலயும் கீழயும் பார்த்த நோக்கியா இதுமாதிரி சப்ப மேட்டரையெல்லாம் என்கிட்ட எடுத்துட்டு வராதனு உனகிட்டே எத்தினிதபா சொல்லிருக்கேன்னு கடிந்துகொண்டே சட்டு புட்டுனு ரெண்டு ஐடியாக்களை எடுத்துவிட்டார்.

ஐடியா 1: நிகழ்ச்சியை வெகு சிறப்பாக அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தலைப்பு, விவாதம், விருந்தினர் என ஒவ்வொரு வாரமும் ஒருங்கிணைக்க வேண்டும். ஒரு வாரம் கூட தளர்வில்லாது காண்போர் அனைவரையும் தொலைக்காட்சித் திரையில் கட்டிப்போடும் வகையில் ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் அடுத்து என்ன? அடுத்து என்ன? என ஆர்வத்தைத் தூண்டுகிற வகையில் ஒழுங்கு செய்யவேண்டும். இத்தகைய ஒரு அபாரமான உபாயத்தை நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவிடம் தெரிவித்தபோது....

இந்த ______ தான் எங்களுக்கே தெரியுமே... நீங்க சொல்ற மாதிரி நிகழ்ச்சி நடத்தணும்னு எங்களுக்கு ஆசையில்லையா? உண்மையைச் சொல்லப்போனால் அதுபோல நடத்தணும்கிற நோக்கத்தோடவும் இலட்சியத்தோடவும்தான் இந்த நீயா?நானா? நிகழ்ச்சியே துவங்கினோம். இன்னமும் அது இலட்சியமாவேதான் இருக்கு... எல்லோரையும் திருப்திப்படுத்தனும்கிறது நடக்கிற கதையா? நீ புதுசா எதுனா சொல்லுயா என்றனர்.

ஓ..இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? நாந்தான் அந்த பேலன்ஸ் 10% ஐடியாவுல ஒண்ணை எடுத்து விட்டு சோதனை செஞ்சு பார்த்தேன்னு சொல்லி சமாளிச்சுட்டு ரெண்டாவது ஐடியாவை எடுத்துவிட்டார்.

ஐடியா 2: உங்களை விமர்சனம் பண்றவங்க யாரு எதுக்காக பண்றாங்கனு யோசிச்சு பாருங்க. பத்திரிக்கைக்காரன் விமர்சனம் பண்ணினா பணத்துக்காக பண்றான்னு சொல்லலாம். நீங்க சொல்ற ஆளுங்களைப் பார்க்க சொல்ல அந்தமாதிரி தெரியலை. ஒண்ணு பொழுது போக்குக்காக பண்றவங்களா இருக்கலாம்.. இல்லைனா தன்னோட பப்ளிசிட்டிக்காக பிரபலமா இருக்கிற இந்த நிகழ்ச்சியைக் கலாய்ச்சு பெரிய ஆளா ஆக முயற்சி செய்றவங்களா இருக்கலாம்.. அதுவுமில்லைனா நீங்க நிகழ்ச்சில பேசுறதை விட நிறைய விபரம் தெரிஞ்சவங்களாகவோ உங்களை விட புத்திசாலியாகவோ இருக்கலாம். இப்படி விதவிதமா இருக்கவங்களை நீங்க திருப்திப்படுத்தலாம் வழியில்லை. பேசாம அவங்களையே கூப்பிட்டு ஒரு நிகழ்ச்சி நடத்தினா என்ன? எல்லோருக்கும் பொழுது போகும்.விளம்பரம் வேணுங்கிறவங்களுக்கு விளம்பரம் கிடைச்சுரும். ரொம்ப அறிவாளிகளா, திறமைசாலிகளா, புத்திசாலிகளா இருக்கவங்க உண்மையிலேயே அப்படித்தானா? இல்லைனா நடிக்கிறாங்களானு தெரிஞ்சுபோவும்.

ரெண்டாவது ஐடியாவைக் கேட்டதும் குழுவினர் அனைவர் முகமும் பிரகாசமானது. சூப்பர் ஐடியாபாஸ்.. நீங்க சொன்னது மட்டுமல்லாது அன்னைக்கு முழுக்க இணையதளம் முழுக்க நம்ம நிகழ்ச்சியைப் பத்திதான் எல்லாரும் பேசுவாங்க.. டி.ஆர்.பி.ரேட் எகிறிடும்னு சொல்லிட்டே ஆலோசகர் நோக்கியாவைத் தூக்கி தட்டாமாலை சுற்றினர் தயாரிப்புக் குழுவினர்.

திட்டத்தைச் செயல்படுத்த பதிவுலகத்தில் முக்கியஸ்தர்களான சிலரும், டுவிட்டரில் முக்கியஸ்தர்களான சிலரும், முகநூலில் சிலரும் மீதி இடங்களை ஏற்கனவே நீயா?நானா?ல சிறந்த பெர்ஃபார்மர் கேட்டகிரில நல்லா சொம்படிக்கிறவங்களா புடிச்சு நிரப்பிடலாம்னு முடிவு பண்ணி ஒவ்வொருத்தரா தொடர்பு கொள்ள ஆரம்பிச்சாங்க... சிலர்ங்கிறது மொத்தத்துலயே பத்துபேருக்குள்ளதான் இருக்கணும் இல்லைனா ”நினைச்சது போல” நிகழ்ச்சிய நிறைவு செய்யமுடியாமப் போயிடும்னு பேசி வச்சுக்கிட்டாங்க.

இனி என்ன நடந்துச்சுனு பார்ப்போம்.

காட்சி 1:

நம்ம டுவீட்டர்களில் ஒருத்தர்ருக்கு அந்த அழைப்பு வந்துச்சு..

நீயா?நானா?குழு: சார்.. நாங்க நீயா?நானா?ல இருந்து பேசுறோம். சமூகவலைத்தலங்களில் பிரபலங்களா இருக்கவங்கல வச்சு ஒரு எபிசோட் பண்ணப்போறோம். டுவிட்டர்ல முக்கியமான ஆளுன்னா அது நீங்கதான்னு சொன்னாங்க.. நீங்களும் உங்க நண்பர்களும் கலந்துக்கலாமே...

டுவீட்டர் 1: சார் நீயா?நானாவா? என்னால என் காதையே நம்ப முடியலையே சார். கோபிநாத் சாரா பேசுறீங்க? எனக்கு உங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் சார்... உங்க நிகழ்ச்சியெல்லாமே ரொம்ப பிரமாதமா இருக்கும் சார். ஞாயிற்றுக்கிழமையானா டிவியை விட்டு அங்கிட்டு இங்கிட்டு போகமாட்டேன் சார். சாப்பிடக்கூடப் போகாம உங்க நிகழ்ச்சியெல்லாம் பார்ப்பேன்னா பார்த்துக்கோங்களேன். இப்ப உங்ககிட்டே இருந்து அழைப்பு வந்ததும் என்னால நம்பவே முடியலை.என்ன பேசுற்துனே தெரியலைசார்... எப்ப.. எங்கேனு சொல்லுங்க சார் எங்க ஆளுங்க எல்லாரும் வந்து இறங்கிர்றோம். டுவிட்டர்ல எல்லாருமே நான் சொன்னா கேப்பாங்க.. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க.

நீ.நா.கு: அய்யய்ய... நான் கோபிநாத் இல்லை சார். சார்லாம் போன்ல பேசமாட்டார் சார். நீங்க ஸ்டூடியோவுக்கு வந்தப்புறம்தான் அவரைப் பார்க்கவே முடியும். ஒரு முக்கியமான விசயம். லிமிட்டட் சீட்தான். டுவிட்டர் பிரபலங்களுக்கு மேக்சிமம் 5 பேர்தான் அனுமதிக்க முடியும். இன்னும் பதிவர்கள், முகநூல் பயனர்கள்னு நிறையபேரு இருக்காங்க.. ஒன்லி 5.

டு1: ஓ.. நான் கூட கோபி சார்தான் பேசுறார்னு நெனைச்சுட்டேன். ஹி.ஹி.. சார் நீங்க சொல்றதுதான் சார் கரெக்டு. ரொம்பபேர் வந்தா நல்லாவே இருக்காது. பசங்க சொல்பேச்சு கேட்கவே மாட்டாங்க.. எனக்கு ஃபாலோயர்ஸ்தான் சார் அதிகம். நான் ஃபாலோ பண்றது ரொம்ப சில பேருதான். எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப கம்மி சார். நான் பார்த்து கூட்டிட்டு வர்றேன் சார். எங்கே..எப்போனு. இடம் சொல்லுங்க.

நீ.நா.கு: வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோலதான் எங்க செட் இருக்கு நீங்க உங்க நண்பர்களோட ______ அன்னைக்கு அங்கே வந்துடணும். கன்ஃபர்ம் பண்ணிச் சொல்லுங்க சார்.ஒரு நாள் சூட்டிங் எக்கச்சக்கமா செலவாகும். உங்களுக்கு இதுதான் நல்ல வாய்ப்பு.

டு2: சார்.. நீங்க கவலையே படாதீங்க. எங்க டீம் டான்னு ஆஜராகிடுவோம்.

காட்சி2:

டுவிட்டர் 1 டுவிட்டர் 2 இடம் அலைபேசியில் அழைத்து விசயத்தைச் சொல்கிறார்.

டு1: மச்சி... சவுக்கியமா?

டு2: ஆங்.. சொல்லுமச்சி.. போன்லாம் பண்ணிப் பேசுறீங்க... அதிசயமா இருக்கு. எதுனா விசேசமா மச்சி.

டு1: விசேசந்தான். உனக்கு எப்படிதான் மூக்குல வேர்க்குதுனு தெரியலை..

டு2: சும்மா சொல்லு மச்சி. போனே பண்ணாதவன் போன் பண்ணாதவன் போன் பண்ணிருக்கியே.. விசேசமில்லாமலா போன் பண்ணிருப்பே...

டு1:மச்சி நீ சிஸ்டம்ல இருந்தா கொஞ்சம் தள்ளி வந்துடு.. அப்பதான் சொல்லமுடியும். இல்லைனா சொல்லச்சொல்ல நீ பாட்டுக்கு டுவிட்டர்ல அப்டேட் பண்ணி விட்டுடுவ. மேட்டர் ரொம்ப கான்பிடன்சியல்..

டு2: என்ன மச்சி பீடிகையெல்லாம் ரொம்ப பலமாயிருக்கு.. நீ பயங்கர உசாரு மச்சி. நீ போன் பண்றங்கிறத இப்பதான் டுவிட்டர்ல அப்டேட் போட்டுவிட்டேன். நல்ல வேளை சொன்னே.. சரி.. சரி தள்ளி வந்துட்டேன். இப்ப சொல்லு.

டு1: மச்சி நீயா?நானால இருந்து கூப்பிட்டாங்க.. சமூக வலைத்தள பிரபலங்களை வச்சு ஒரு எபிசோடாம்.. டுவிட்டருக்கு 5 பேரு. நம்ம ஒரு டீமா போயிடலாமா? சும்மா ஒரு கலக்கு கலக்கிர்லாம் மச்சி.

டு2: நிசமாவா மச்சி சொல்ற.. செம்ம மேட்டர் போ.. எப்ப மச்சி.

டு1: அடுத்த வாரம் சூட்டிங். ரெண்டு மூணு வாரம் கழிச்சு டெலிகாஸ்ட் ஆகுமாம்.

டு2: ம்ம்.. வேற யார்லாம் வராங்க.

டு1: வேற யாருக்கும் சொல்லலை. முதல்ல உனக்குதான் போன் பண்றேன். இனிமேதான் (இன்னொரு டுவிட்டர் பேரச் சொல்லி) அவனுக்கு போன் பண்ணனும்.

டு2: வெயிட்.. வெயிட்.. மச்சி அவன்லாம் வேண்டாம் நீயும் வேற யார்ட்டயும் சொல்லிடாத. இதை கொஞ்சம் ப்ளான் பண்ணி பண்ணனும். நீ, நான்.. அவன்.. அப்றம் இவன்.. அப்றம் அவன் வேணும்னா அவரையும் கூப்டுக்கலாம். வெளியாளு யாருக்கும் தெரிஞ்சுடாம நமக்குள்ளேயே வச்சுப்போம் மச்சி.

டு1: ம்ம்ம். நீ சொல்றதுல அந்த அவன் ஒரு மாதிரி ஆளேச்சேய்யா... அவனைக் கூப்பிட்டுட்டு போயி பெரியாளாக்கி விடணுமான்னு பார்க்கிறேன்.

டு2: ஏ.. அவன் நம்மாளுப்பா.. நம்ம சொன்னா கேப்பான்.

டு1: ஓகே.. காருக்கு எதுனா ஆளு சிக்குமா?

டு2: அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மச்சி... அந்தக் கணக்குகூட நான் போடமாட்டேனா?

டு1: ஹி..ஹி.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா மச்சி.. ஓகே.. சூட்டிங் அன்னிக்கு 4 மணிக்கு ___________ இடத்துல மீட் பண்றோம். ஒண்ணாவே.. போறோம். கோட்டு கோபியை கலாய்க்கிறோம்.

டு2:ஓகே.


அதன் பிறகு.. டுவிட்டர் குழுவினர் நீயா?நானா? படப்பிடிப்பில் பிரகாசமாகக் கலந்து கொண்டு பல்பு வாங்கித் திரும்புகின்றனர். படப்பிடிப்பில் நடந்தது ஒளிபரப்பிலும் அதைத் தொடர்ந்த தன்னிலை விளக்கங்களிலும் தெரிந்து விடப் போவதால் அதை இங்கே காட்சிப்படுத்தவில்லை.

காட்சி3:
படப்பிடிப்பு முடிந்ததும் டுவிட்டர்களுக்குள் நடந்த உரையாடல்..
வாடிய முகங்களுடனும், வருந்திய கண்களுடனும் நமது டுவிட்டர்கள்.

டு2: என்ன மச்சி இப்படியாயிப்போச்சு..

டு3: எனக்கு அப்பவே தெரியும் மச்சி. இதுக்குதான் நான் வரலைனு அப்பவே சொன்னேன்.

டு2: தோடா.. வரலைன்னாராம்ல.. வாண்டடா வண்டில வந்து ஏறிட்டு பேச்சைப் பாரு..

டு3: இல்லை மச்சி வரலைனு சொல்லணும்னு நினைச்சேன். அதுக்குள்ள வண்டி வந்துடுச்சா.. அதான் ஏறிட்டேன். ஹி..ஹி..

டு4: எத்தன நாளாய்யா திட்டம் போட்டீங்க... இப்படிக் கூட்டிட்டு வந்து மூக்கறுக்கணும்னு..

டு2: யோவ்.. உன்னை மட்டுமாய்யா மூக்கறுத்தாங்க.. தக்காளி அவன் பாரபட்சமில்லாம எல்லாரையும் செஞ்சுட்டுதானய்யா விட்டான்...

டு5: இந்த மாதிரிலாம் நடக்கும்னு தெரிஞ்சுருந்தா... அவன் இருக்கான்ல... அவனை கூட்டிட்டு வந்திருக்கலாம். நம்ம அசிங்கப்பட்டது வருத்தமா இருந்தாலும் அவன் அசிங்கப்படுறத பார்த்து சந்தோசப் பட்டிருக்கலாம். பேலன்ஸாயிருக்கும்.

டு3: எங்கே போனாலும் உன்புத்தியை காமிச்சுருவியே...

டு2: மச்சி இப்ப டுவிட்டர்ல இருக்கவங்களுக்கு இது தெரிஞ்சா அசிங்கமாப் போயிடுமே.. என்னடா பண்றது..

டு6: எல்லாரையும் நாம கலாய்ச்சோம்.. இப்ப எல்லாப் பயலும் சேர்ந்து நம்மளைக் கலாய்ப்பானே..

டு2: ஏ.. விடுங்கப்பா.. அசிங்கப்படுறதெல்லாம் நமக்கு புதுசா... அவங்க என்னடா நம்மள கலாய்க்கிறது.. நம்மளே நம்மள கலாய்ச்சு டுவீட் போடுவோம்.. பயபுள்ளைங்க ஷாக் ஆகி என்ன செய்றதுனு தெரியாம முழிப்பானுங்க. நம்ம எஸ்கேப் ஆகிடலாம்.


டிஸ்கி: இந்த டுவீட் லாங்கர் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. சிரிப்புக்காக மட்டுமே.. சிரிப்பே வரலைனா பரவால்ல. சீரியசா தன்னிலை விளக்கம் குடுக்கிறதை விட்டுட்டு இதே மாதிரி ஒரு கதையை சிரிப்பு வர்றா மாதிரி எழுதி விடுங்க.. எல்லாரும் சேர்ந்து சிரிப்போம். :-)
http://tl.gd/n_1rkscac


பொதிகைச் செல்வன் @thunukku


17th June 2013 from TwitLonger

No comments:

Post a Comment